November 30, 2012

நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,

அஞ்சி யஞ்சிச்  சாவார்-இவர் 

அஞ்சாத பொருளில்லை அவனியிலே 

வஞ்சனை ப் பேய்கள் என்பார்-இந்த 

மரத்தில் என்பார்; அந்த குளத்தில் என்பார்

துஞ்சுது முகட்டில்  என்பார்-மிக 

துயர்ப் படுவார் எண்ணிப்  பயப்படுவார் 
(நெஞ்சு)


மந்திர வாதி யென்பார்-சொன்ன  

மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார் 

யந்திர சூனியங்கள் -இன்னும் 

எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!

தந்த பொருளைக் கொண்டே - ஜனம் 

தாங்குவர்  உலகத்தில் அரசரெல்லாம் 
அந்த அரசியலை -இவர் 

அஞ்சுதரு பேயென்றெண்ணி  நெஞ்சம் அயர்வார்
(நெஞ்சு)
  
சிப்பாயைக் கண்டு  அ ஞ்சுவார்-ஊர்ச்

சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார் 

துப்பாக்கி கொண்டு  ஒ ருவன்  வெகு 

தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார் 

அப்பால்  எவனோ செல்வான்-அவன் 

ஆடையைக் கண்டு பயந் தெழுந்துநிற்பார் 

எப்போதும் கைகட்டுவார்-இவர் 

யாறிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார் 
(நெஞ்சு)
  
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 

கொஞ்சமோ பிரிவினைகள் -ஒரு 

கோடிஎன்  றால் அது பெரிதாமோ?

ஐந்துதலைப் பாம்பென் பான்-அப்பன் 

ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால், 

நெஞ்சு பிரிந்திடு வார்-பின்பு 

நெடுநாளிருவரும் பகைத்திருப்பார் (
நெஞ்சு)


சாத்திரங்கள்   ஒன்றும்  காணார் -பொய்ச் 

சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே 

கோத்திரம் ஒன் றா யிருந்தாலும் -ஒரு 

கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார் 

தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் -தமைச் 

சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார் 

ஆத்திரங்  கொண்டே இவன் சைவன் -இவன் 

அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார்.
 (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்குதில்லையே -இதை 
நினைந்து நினைந்திடினும் வெறுக்கு  திலையே  
கஞ்சி குடிப்பதற் கிலார் -அதன் 
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்   
பஞ்சமோ பஞ்சம் என்றே -நிதம் 
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் 
துஞ்சி மடிகின்றாரே -இவர் 
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே (நெஞ்சு)


எண்ணிலா நோயுடையார்-இவர் 
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் 
கண்ணிலாக் குழந்தை கள்போல்-பிறர் 
காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் - பத்து 
நாலாயிரங் கோடி நயந்து நின்ற 
புண்ணிய நாட்டினிலே -இவர் 
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் (நெஞ்சு)

No comments: