December 12, 2012

நிற்பதுவே,நடப்பதுவே, பறப்பதுவே



நிற்பதுவே,நடப்பதுவே, பறப்பதுவே, நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே! கேட்பதுவே, கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?


வானகமே,  இளவெயிலே,  மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ? வெறுங்  காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர்  கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?


கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?

 சோலையிலே மரங்க ளெல்லாம்  தோன்றுவதோர் விதையிலென்றால் ,
சோலை பொய்யாமோ? - இதை சொல்லோடு  சேர்ப்பாரோ ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?

காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.

No comments: