December 21, 2012

நடிப்பு சுதேசிகள்

நடிப்பு சுதேசிகள்  என்ற  தலைப்பில் பாரதி எழுதிய  பாடல்  இது. 

பிரிட்டிஷ்  ஆட்சி காலத்தில் சுதந்திரம் வேண்டிப்  போராடியவர்களுக்கு சுதேசிகள் என்று பெயர். சுதந்திரம் வேண்டிப்  போராடுபவர்களை தேசதுரோகம் செய்தவர்களைப்  போல் பிரிட்டிஷ் அரசு நடத்தியதால் சுதந்திரம் வேண்டி போராடுபவர்களுடன் பேசவோ அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ளவோ கூட சக மனிதர்கள் பயந்திருந்த காலம் அது. 
இது ஒரு புறம் இருக்க, ஒரு சிலரோ சுதேசிகள் போல் வாய்    கிழிய  பேசுவார்களே ஒழிய, உண்மையான சுதந்திர   உணர்வு  இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.
அவர்களை சாடி பாரதி எழுதிய கவிதை தான்  இது.
இன்று நடிப்பு சுதேசிகளை காணும் பாக்கியம் நமக்கு கிடைக்காதெனினும், வாய்சொல்லில் வீரர்கள் நம்மை சுற்றி பலர்   எல்லா கால கட்டத்திலும் இருக்கத்  தான்  செய்கிறார்கள். 

பாரதியின் பாடல் இங்கே  

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடீ !

கூட்டத்திற்  கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி

 நாட்டத்திற்  கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ !

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்

அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!
அலிகளுக் கின்ப முண்டோ?

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற

பெண்களின் கூட்டமடீ! - கிளியே!
பேசிப் பயனென் னடீ

யந்திர சாலை யென்பர் எங்கள் துணிகளென்பர்,

மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!
மாங்கனி வீழ்வ துண்டோ!

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்

செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
செய்வ தறியா ரடீ!

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்

நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!
நம்புத லற்றா ரடீ!

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்

பேதைகள் போலு யிரைக் - கிளியே
பேணி யிருந்தா ரடீ!

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய

ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ!

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்

உச்சத்திற் கொண்டா ரடீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா

மாக்களுக் கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதி யுண்டோ?

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்

ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ?

சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்

வந்தே மாதர மென்பார்! - கிளியே!
மனதி லதனைக் கொள்ளார்

பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்

பழமை இருந்த நிலை! - கிளியே!
பாமர ரேதறி வார்!

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்

தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
சிறுமை யடைவா ரடீ!

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்

துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்

வாயைத் திறந்து சும்மா - கிளியே!
வந்தே மாதர மென்பார்!

1 comment:

சசிகலா said...

அருமையான பாடல் வரிகள் சிறந்த பகிர்வு.